Menu

1 யோவான் 2

TCV

1 என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர். 2 நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே. 3 இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம். 4 “இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை. 5 ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்: 6 ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும். 7 அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை. 8 ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது. 9 தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான். 10 தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை. 11 ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது. 12 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். 13 தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். 14 அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும், நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன். 15 உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை. 16 ஏனெனில் உலகத்திலுள்ளவைகளான சரீர ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய எல்லாம் பிதாவினிடத்திலிருந்து வருவதில்லை; இவை உலகத்திலிருந்தே வருகின்றன. 17 உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். 18 அன்பான பிள்ளைகளே, இதுவே கடைசி மணிவேளை; கிறிஸ்து விரோதி வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து விரோதிகள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனாலேயே, இதுவே கடைசி மணிவேளை என்று நாம் அறிந்துகொள்கிறோம். 19 நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது. 20 ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள். 21 உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன். 22 யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான். 23 மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார். 24 எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை, உங்களில் நிலைத்திருக்கும்படி கவனமாயிருங்கள். அவை அப்படி நிலைத்திருந்தால், நீங்கள் மகனாகிய கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. 26 உங்களை வழிவிலகப்பண்ண முயற்சிக்கிறவர்களின் சூழ்ச்சியை எண்ணியே உங்களுக்கு இவற்றை நான் எழுதுகிறேன். 27 உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள். 28 இப்பொழுதும் அன்பான பிள்ளைகளே, நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் வாழுங்கள். அப்படியானால், அவர் மீண்டும் வரும்போது, நாம் அவருக்கு முன்பாக மனவுறுதி உடையவர்களாயும் வெட்கப்படாதவர்களாயும் இருப்போம். 29 இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கிற ஒவ்வொருவனும் அவரால் பிறந்த அவருடைய பிள்ளையாய் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate