Menu

ஏசாயா 36

TCV

1 எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான். 2 பின் அசீரிய அரசன் ரப்சாக்கே என்னும் தனது படைத்தளபதியை பெரிய இராணுவத்துடன் லாகீசிலிருந்து, எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். படைத்தளபதி, வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றான். 3 அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவனிடத்திற்குப் போனார்கள். 4 படைத்தளபதி ரப்சாக்கே அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே, நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்? 5 உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்? 6 இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான். 7 அல்லது நீ என்னிடத்தில், “எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்பாயாகில், “இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா? 8 " ‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். 9 தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்? 10 மேலும் யெகோவா இல்லாமலா நான் இந்த நாட்டைத் தாக்கவும், அழிக்கவும் வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’ " என்றான். 11 பின்பு எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில் பேசவேண்டாம்” என்றார்கள். 12 ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான். 13 பின்பு தளபதி எழுந்து நின்று, எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள். 14 அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது! 15 எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம். 16 “எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானம்பண்ணி என்னிடம் வாருங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான். 17 நான் வந்து உங்களை, உங்களது நாட்டைப்போல தானியமும், புதுத் திராட்சை இரசமும், அப்பமும், திராட்சைத் தோட்டங்களும் நிறைந்த நாட்டிற்குக் கூட்டிச்செல்லும்வரை இவ்வாறு செய்வீர்கள். 18 “எசேக்கியா, ‘யெகோவா எங்களை மீட்பார்’ என்று கூறி உங்களைத் தவறான வழியில் நடத்த விடாதீர்கள். எந்த நாட்டின் தெய்வமாவது, எப்பொழுதாவது அவர்கள் நாட்டை அசீரிய அரசனின் கையிலிருந்து மீட்டதுண்டோ? 19 ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயிமின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ? 20 இந்த நாடுகளின் தெய்வங்கள் எல்லாவற்றிலும், எந்தத் தெய்வத்தினால் எனது கரத்திலிருந்து தனது நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்?” என்றான். 21 ஆனால் மக்களோ விடை ஒன்றும் கூறாமல், மவுனமாய் இருந்தார்கள். ஏனெனில், “அவனுக்குப் பதில் கூறவேண்டாம்” என அரசன் கட்டளையிட்டிருந்தான். 22 பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள்.

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate