Menu

சகரியா 3

TCV

1 அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். 2 யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார். 3 அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான். 4 தூதன் அவனுக்கு முன்பாக நிற்கிறவர்களிடம், “இவனுடைய அழுக்கு உடைகளைக் களைந்து விடுங்கள்” என்றார். அவர் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றிவிட்டேன். விலை உயர்ந்த உடைகளை நான் உனக்கு உடுத்துவிப்பேன் என்றார்." 5 அப்பொழுது நான், “அவனுடைய தலையில் சுத்தமான தலைப்பாகையையும் வைத்தால் நல்லது என்றேன்.” எனவே அவர்கள் யெகோவாவின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை அவனுடைய தலைமீது வைத்து, உடைகளை உடுத்தினார்கள். 6 அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்: 7 “சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன். 8 " ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன். 9 யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். 10 " ‘அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் அயலானை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து உட்கார்ந்து உங்கள் சமாதானத்திலும் செழிப்பிலும் பங்குகொள்ளும்படி அழைப்பீர்கள்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்."

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate